Jun 17, 2009

மனம் கடக்கும் கலை.


சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம்.

அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.

எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.

எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.

மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?

உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது
- நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது
- ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது
- அங்கு ஒரு முறை போய் சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது...

இந்த எண்ணங்களெல்லாம் நொடிகளில் வந்து போகும்.

ஆக இது தொடர்ச்சியாக போய் கொண்டே இருக்கும். நாம் தியானம் செய்ய அமர்ந்ததையே மறந்து விடுவோம்.

ஏனென்றால் நமது மனம் அவ்வாறு பழ(க்)கி விட்டது. நாம் மனம் போன போக்கில் போய் கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது நாம் என்னென்ன எண்ணங்களை எண்ணுகிறோம் என்று கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

நமது மனமாகிய வேலைக்காரன் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால் எஜமான் அங்கு இல்லை.

எஜமான் வந்தால் வேலைக்காரன் அடங்கி விடுவான் .

அந்த எஜமான் தான் விழிப்புணர்வு.

வேலைக்காரனாகிய மனத்தை கண்காணிக்கும் எஜமான் தான் விழிப்புணர்வு!

இன்னும் சொல்வதென்றால் மேலே சொன்ன அதே உதாரணம்:

இப்போது நாம் விழிப்புணர்வுடன் தியானத்தில் அமர்கிறோம்.

அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டிருக்கிறோம்.)

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது - நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)

அந்த கவனிப்பு உணர்வு தான் விழிப்புணர்வு.

இப்படி பார்த்து கொண்டு வரும் போது விரைவில் எண்ணங்கள் வலுவிழந்து போய், மறந்து விடும்.

அங்கு தான் தியானம் நிகழ்கிறது.

(குறிப்பு: மேலே சொன்னது தியானத்தில் ஒரு முறை தான். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் தகுந்த ஞான ஆசிரியரின் துணையுன் அவரவர்களுக்கேற்ற முறையை ஆலோசித்து செய்யவும்.)


Jun 12, 2009

தியானம் செய்வது எப்படி?



ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.

ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.

ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.

தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன எனக்கு இன்னும் தியானம் வரலை..? தியானம் எப்படி இருக்கும்' என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் ஏற்படுவதில்லை.

மேலும் தியானம் செய்ய உட்காரும் போதே 'நான் அடுத்த பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்' என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வது நன்று.

தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது.

அப்படி பார்க்க, பார்க்க எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன.

எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன.

அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது.

அனைத்து தியான முறைகளும் மனமற்ற நிலையை அடையும் வழிக்கான கருவிகளே.

மேலே சொல்லப் பட்டதும் அவற்றில் ஒரு முறை.

இன்னும் வரும் பதிவுகளில் எண்ணங்களை கடந்து செல்லும் நுட்பத்தை பற்றி விரிவாக விவாதிப்போம்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...