Jul 29, 2009

சுய உருவகத்தின் மாபெரும் சக்தி..!


முதலில் சுய உருவகம் என்றால் என்ன என்பதை நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து கொள்வோம்.

- சுய உருவகம் என்பது ஒருவர் தன்னை பற்றி நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் கலவை ஆகும்.
- ஒருவர் தனது சுய உருவகத்தை மாற்றுவதன் மூலம் தனது செயல்பாடுகளை திறமைகளை, ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

நம்மைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைகள் எப்படி உருவாயின என்று ஆராய்ந்தால் இவை நமது சொந்த நம்பிக்கைகள் அல்ல என்று தெரிய வரும்.

சமூகத்தால் திணிக்கப்பட்ட எண்ணங்களையே நமது சொந்த நம்பிக்கைகளாக நினைத்து, நமது ஆற்றல் இவ்வளவு தான் என நினைத்து வாழ்ந்து வருகிறோம்.

நமது மட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் தான் நமது வெற்றியின் எல்லையை விரிவு படுத்த தடையாக இருக்கின்றன.

ஆனால் உண்மையில் எதையும் சாதிக்க வல்ல அபார ஆற்றலை நாம் கொண்டுள்ளோம் என்பதே உண்மை.

நாம் அனைவரும் சாதனையாளராக முடியும்

அதற்கு நமது மட்டுப்படுத்தப் படுத்தப்பட்ட நம்பிக்கைகளை தகர்க்க வேண்டும்!
- நமது சுய உருவகத்தை மாற்ற வேண்டும்.

சுய உருவகத்தை நாம் விரும்பும் குறிக்கோளுக்கேற்றாற்போல் விரிவு படுத்த வேண்டும்.

சுய உருவகத்தை உருவகத்தை மாற்றினால் சூப்பர் வெற்றி நிச்சயம்!

(சுய உருவகத்தை மாற்றி அமைக்கும் நடைமுறை வழிமுறையை பிரிதொரு சமயம் விவாதிப்போம்.)

Jul 27, 2009

சொற்களின் சக்தி


நாம் உச்சரிக்கும் சொற்களுக்கும் சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது சொல்களுக்கேற்றவாறு நமது உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

திரும்ப திரும்ப உச்சரிக்கப்படும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்கு சென்று மனதிற்கு தெம்பும் தைரியமும் தருகின்றது.
வேண்டிய குறிக்கோளை நோக்கி நம்மை செலுத்துகிறது. வேகமாக குறிக்கோளை அடைய துணை புரிகிறது.

மேலும் நல்ல எண்ணத்துடன் உச்சரிக்கப்படும் சொற்கள் பிரபஞ்ச மனத்தை அடைந்து எப்போதும் நமக்கு நன்மையை புரிகின்றன.

உலக மக்களுக்கு நன்மை புரிய மனவளக்கலையை அருளிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைத்த சங்கற்பங்களில் சில:

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருள் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”


சங்கற்பம்:

“எல்லாம் வல்ல அருட்பேராற்றல் கருணையால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்”

“ ஆறு, ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய் பொழிய, மக்கள் வளமாய் வாழ..!
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

“வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

Jun 17, 2009

மனம் கடக்கும் கலை.


சென்ற பதிவில் விழிப்புணர்வு தியான முறையை பற்றி விவாதித்தோம்.

அதன் நுட்பத்தை பற்றி இன்று தொடர்வோம்.

எண்ணங்களற்று போகும் நிலையே தியானம்.

எண்ணங்கள் அற்ற நிலையே மனம் கடந்த நிலை.

மனதை கடக்க உதவுவது விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வு என்றால் என்ன?

உதாரணமாக - நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது.

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது
- நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது
- ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது
- அங்கு ஒரு முறை போய் சாப்பிடும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது...

இந்த எண்ணங்களெல்லாம் நொடிகளில் வந்து போகும்.

ஆக இது தொடர்ச்சியாக போய் கொண்டே இருக்கும். நாம் தியானம் செய்ய அமர்ந்ததையே மறந்து விடுவோம்.

ஏனென்றால் நமது மனம் அவ்வாறு பழ(க்)கி விட்டது. நாம் மனம் போன போக்கில் போய் கொண்டிருக்கிறோம்.

எப்போதாவது நாம் என்னென்ன எண்ணங்களை எண்ணுகிறோம் என்று கவனித்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

நமது மனமாகிய வேலைக்காரன் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால் எஜமான் அங்கு இல்லை.

எஜமான் வந்தால் வேலைக்காரன் அடங்கி விடுவான் .

அந்த எஜமான் தான் விழிப்புணர்வு.

வேலைக்காரனாகிய மனத்தை கண்காணிக்கும் எஜமான் தான் விழிப்புணர்வு!

இன்னும் சொல்வதென்றால் மேலே சொன்ன அதே உதாரணம்:

இப்போது நாம் விழிப்புணர்வுடன் தியானத்தில் அமர்கிறோம்.

அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நாம் தியானம் செய்ய அமர்கிறோம்.

அப்போது தூரத்தில் இருந்து ஏதோ ஒரு புதிய திரைப்படப்பாடல் வந்து நம் செவியில் விழுகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டிருக்கிறோம்.)

உடனே நமக்கு சமீபத்தில் அந்த படத்துக்கு சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- கூட வந்த நண்பனின் ஞாபகம் வருகிறது - நண்பனின் பிறந்த நாள் இந்த வாரம் என்பது ஞாபகம் வருகிறது ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
- பிறந்த நாளுக்கு சிறு விருந்துக்கு எங்கு போகலாம் என்று மனம் சிந்திக்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)
ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் பதார்த்தங்கள் சிறப்பாக இருக்கும் என்று மனம் சொல்கிறது - ( 'நாம்' என்ற அந்த உணர்வில் மையம் கொண்டு அந்த எண்ணத்தை பார்க்கிறோம்)

அந்த கவனிப்பு உணர்வு தான் விழிப்புணர்வு.

இப்படி பார்த்து கொண்டு வரும் போது விரைவில் எண்ணங்கள் வலுவிழந்து போய், மறந்து விடும்.

அங்கு தான் தியானம் நிகழ்கிறது.

(குறிப்பு: மேலே சொன்னது தியானத்தில் ஒரு முறை தான். தியானம் செய்ய விரும்புகிறவர்கள் தகுந்த ஞான ஆசிரியரின் துணையுன் அவரவர்களுக்கேற்ற முறையை ஆலோசித்து செய்யவும்.)


Jun 12, 2009

தியானம் செய்வது எப்படி?



ஆம் நம் மனம் தான் தியானத்திற்கு எதிரி. மனதின் இயல்பு எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது.

ஆனால் தியான நிலையோ மனமற்ற, எண்ணங்களை கடந்த நிலையில் ஏற்படுகிறது.

ஒருமுறை எண்ணங்களை கடப்பது எப்படி என்ற நுட்பம், balance கிடைத்து விட்டால் போதும் அப்புறம் மறப்பதில்லை.
தியானம் எளிதாகி விடும். அது மிதி வண்டி ஓட்டிப் பழகும் போது கிடைக்கும் balance ஐ போன்றது.

தியானம் செய்ய உட்கார்ந்து விட்டு ' என்ன எனக்கு இன்னும் தியானம் வரலை..? தியானம் எப்படி இருக்கும்' என்று தொடர்ந்து மனம் எண்ணிக் கொண்டிருந்தால் தியானம் ஏற்படுவதில்லை.

மேலும் தியானம் செய்ய உட்காரும் போதே 'நான் அடுத்த பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கு எதைப் பற்றியும் எண்ண மாட்டேன்' என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வது நன்று.

தியானம் செய்ய அமர்ந்தவுடன் மனம் ஏகப் பட்ட எண்ணங்களை அவிழ்த்து விடும். அப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் 'நாம் தியானத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வுடன், அந்த எண்ணங்களுடன் கலந்து நம்மை மறந்து பின் செல்லாமல், அந்த எண்ணங்களை சற்று விலகி நின்று உற்று பார்க்க வேண்டும். இதற்கு தான் நமது விழிப்புணர்வு உதவுகிறது.

விழிப்புணர்வின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்களுக்கு எண்ணங்களை அவற்றுடன் ஒட்டாமல் விலகி நின்று பார்ப்பது எளிதாகிறது.

அப்படி பார்க்க, பார்க்க எண்ணங்கள் மெதுவாக தங்கள் வலுவை இழக்கின்றன.

எண்ணங்கள் மெதுவாக அடங்குகின்றன.

அப்படி எண்ணங்கள் அற்ற நிலையில் தான் தியானத் தன்மை உண்டாகிறது.

அனைத்து தியான முறைகளும் மனமற்ற நிலையை அடையும் வழிக்கான கருவிகளே.

மேலே சொல்லப் பட்டதும் அவற்றில் ஒரு முறை.

இன்னும் வரும் பதிவுகளில் எண்ணங்களை கடந்து செல்லும் நுட்பத்தை பற்றி விரிவாக விவாதிப்போம்.

May 31, 2009

புகை பிடிப்பதை நிறுத்த வழி..!


"புகை பிடிப்பதை நிறுத்த புத்தம் புது வழி" என்ற சென்ற பதிவில் புகை பிடிக்கும் பழக்கம் எப்படி ஏற்படுகிறது, செயல் படுகிறது, ஏன் அதை அதை நிறுத்துவது கடினமாக உள்ளது என்பதை பற்றி எழுதியிருந்தேன்.

இந்த பதிவில் அதனை நிறுத்தும் வழியை பார்ப்போம்.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதனால் இந்த பதிவை இன்று எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் சூர்யா கண்ணன் புதிதாக் வந்துள்ள NuLife Chewettes for Smokers என்ற சூயிங்கத்தை பற்றி எழுதியிருந்தார்.

முன்றைய பதிவில் சொல்லிய படி, தொடர்ந்து செய்யும் புகை பிடிக்கும் பழக்கம் நமது மூளையில், உடலில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.
அந்த பதிவு தொடர்ந்து புகைக்க புகைக்க ஆற்றல் வாய்ந்ததாய், தவிர்க்க முடியாததாய் மாறுகிறது.
தகுந்த சூழ்நிலையில் அந்த ஆற்றல் வேலை செய்து புகை பிடிக்கும் எண்ணத்தை தூண்டுகிறது.
புகை பிடித்து முடிக்கும் வரை அடங்குவதில்லை. பிடித்து முடித்த பின் அந்த தூண்டுதலின் ஆற்றல் தற்காலிகமாக நிறைவடைகிறது, நிறுத்தப்படுகிறது.

ஆக அந்த தூண்டுதலை, ஆற்றலை புகை பிடிக்காமலேயே சமன் செய்து விட்டால் சரிதானே?

அந்த சமன்பாட்டுக்கு தான் இது போன்ற சூயிங்கங்கள் உதவுகின்றன.

நான் எழுத நினைத்ததும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக ஏதாவது மிட்டாயை மெல்வதை பற்றி தான்.

அதே சமயத்தில் நமது நண்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தகவலுக்கு நன்றி சூர்யா கண்ணன்.
இதை தான் எண்ணங்களின் ஒத்த நிகழ்வு என்று கூறுவார்கள். (இன்னொரு பதிவுக்கு தலைப்பு கிடைத்து விட்டது!)

இந்த சூயிங்கம், மிட்டாயை விட சிகரெட்டுக்கு மிக சரியான மாற்று தான்.
இதன் விலை 2ருபாய் 50பைசாவாம்.

புகை பிடிக்கும் பழக்கம் மூளையில் மட்டுமல்ல, உடலின் செல்களில் கூட பதிவை ஏற்படுத்துகிறது.
எனவே புகை பிடிக்கும் தூண்டுதல் ஏற்பட்டவுடன் உடலின் செல்கள் சிகரெட்டை உடனே கேட்கின்றன.
அப்போது உடனே கொஞ்சம் கூட தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட வேண்டும்.

ஏனென்றால் தாமதித்தால் நமது மனம் நம்மை ஏமாற்றும். பல்வேறு காரணங்களை சொல்லும்.
'இன்றைக்கு ஒரே ஒரு நாள் தம் அடிக்கலாம். நாளையிலிருந்து கட்டி வைத்து அடித்தாலும் புகைக்க மாட்டோம்' என்று கூட சொல்லும்.

ஆகவே தாமதிக்காமல் இந்த சூயிங்கத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

இதன் மூலம் ஒரளவுக்கு அந்த தூண்டுதல் சமப் படுத்த பட்டு விடும்.

இப்போது அந்த பழைய பதிவுகளை, தூண்டுதலை எதிர்பபது அவ்வளவு கடினமாக இருக்காது.

மேலும், புகை பிடிப்பதன் தீமைகளை தொடர்ந்து மனதில் எண்ணி பார்க்க வேண்டும்.
புகைப்பது உடலுக்கு, இதயத்துக்கு, நுரையீரலுக்கு, பிற உறுப்புகளுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணி பார்க்க வேண்டும்.

இதற்காக எப்போதும் சட்டைப் பையில் புகையிலையின் தீமைகளை விளக்கும் எழுத்துக்களையும், படங்களையும் வைத்திருப்பது சிறந்தது.
புகை பிடிக்கும் தூண்டுதல் செயல் பட ஆரம்பிக்கும் போது, அந்த குறிப்பை எடுத்து பார்க்க வேண்டும்.

அதன் தீமைகளை மனதில் எண்ணுவது தூண்டுதலை, பழைய ஆற்றலை எதிர்த்து சமப்படுத்தும்.

ஆரம்பத்தில் இது சிறிது சிரமமாக இருந்தாலும், தொடரும் போது பலன் தரும்.

அதிகமாக புகை பிடிப்போர் மருத்துவரின் ஆலோசனையை கேட்க தவற வேண்டாம்.

May 28, 2009

புகை பிடித்தல்: விடுவது எப்படி? - புத்தம் புதிய வழி!!



ஒருவர்: ஏன்யா, அதான் ’புகை பிடிக்காதீர்’ ன்னு போர்டு வச்சிருக்கே..இங்க உக்காந்து புகை பிடிக்கறே?

மற்றவர்: நான் எங்கேங்க புகை பிடிக்கிறேன்..? விட்டுட்டு தானே இருக்கேன்..

* * * * * * * *

ஒருவர்: ஏன் சார், நீஙக சிகரெட் பிடிக்கறதானல தானே உடம்புக்கு இவ்வளவு பிரச்சனை. பேசாம சிகரெட்டை விட்டுற வேண்டியது தான..?

மற்றவர்: விட்டா சிகரெட் கீழே விழுந்துடுங்க..

என்பது போன்ற நகைச்சுவை துணுக்குகளை நாம் ரசித்து படித்தாலும், புகை பிடிப்பதன் தீமையை நன்கு அறிவோம்.

விளையாட்டாகவும், நண்பர்களின் தூண்டுதலிலும் புகை பிடிக்க ஆரம்பித்து, விட முடியாமல் தவித்துக் கொண்டிருப்போரையும் அறிவோம்.

மனம் பழக்கத்திற்கு அடிமை.

சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கும் போது முதலில் அதில் எந்த வித மகிழ்ச்சியும் இருப்பதில்லை. தொடர்ந்து செய்யும் போது அது ஒரு பழக்கமாக மாறி ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இந்த பழக்கத்தை நிறுத்தவது எப்படி?

அதற்கு முதலில் அதன் அடிப்படையை தெரிந்து கொள்வோம்.

ஒவவொரு முறை புகை பிடிக்கும் போது அந்த செயல் அவர்களின் மூளையில் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது.

அந்த பதிவுகள் மெல்ல ஒரு ஆற்றலாக உருவாகி சேமித்து வைத்துக் கொள்ளப் படுகிறது.

முன்பு ‘சுய முன்னேற்ற நூல்களால் சுய முன்னேற்றம் ஏற்படுமா?’ என்ற பதிவில், சூழ்நிலை எவ்வாறு எண்ணங்களை தூண்டுகிறது என்பதை ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி நாயை வைத்து செய்த ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்ததை பற்றி, படித்தது நினைவிருக்கலாம்.

படிக்காதவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்:


அதே போல் பொருத்தமான சூழ்நிலை ஏற்படும் போது, எடுத்துக்காட்டாக தேனீர் அருந்திய பின்போ, உணவு உண்ட பின்போ அல்லது நண்பர்களுடன் சேரும் போதோ அந்த சேமித்து வைக்கப் பட்ட எண்ண ஆற்றல் புகை பிடிக்க தூண்டுகிறது.

அந்த ஆற்றல் மன வலிமையை விட சக்தி வாய்ந்ததாக உள்ளதால், என்ன தான் அது தீமை என்று நமது மனதின் ஒரு பகுதி சொன்னாலும், அது ஜெயித்து விடுகிறது.

ஆகவே தான் புது வருட சபதம் எடுப்பவர்களால் சிறிது நாள் புகை பிடிக்காமல் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதற்கு அர்த்தம் அவர்களது மன சங்கல்பத்தின் சக்தி ஓரளவு உள்ளதால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை முறியடிக்க முடிகிறது.

ஆனால் விரைவில் அவர்கள் தங்கள் மன வலிமையை, சங்கல்பத்தின் சக்தியை இழந்து விடுகிறார்கள். அதன் சக்தி மங்கி விடுகிறது.

நீண்ட காலமாக அவர்கள் புகை பிடித்து சேமித்து வைத்த ஆற்றல் அவர்களது மன வலிமையை தோற்கடித்து விடுகிறது.

ஆக இந்த பழக்கததை விட்டி விட செய்ய வேண்டியது மிகவும் எளிது – உருவான அந்த ஆற்றலை சமப்படுத்த வேண்டும்!

அதற்கும் எளிய வழியுண்டு.


அதனை பின்வரும் இணைப்பை க்ளிக்கி படிக்கலாம்:



கீழே உள்ள தமிழிஷ் இணைப்பில் ஓட்டுப் பொத்தானை அழுத்தியும், ‘இந்த பதிவை நண்பருக்கு தெரிவியுங்கள்’ இணைப்பின் மூலம் மின்னஞ்சல் செய்தும் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க நாமும் கண்டிப்பாக பங்காற்ற முடியும்.

நன்றி.

May 14, 2009

நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!


உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.

நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.

அந்த அதிர்வுக்கும் விளைவுகள் உண்டு.

பிரபஞ்சம் அதற்கான விளைவுகளை நமக்கு சூழ்நிலைகள் மூலமாக தருகிறது.

நல்லெண்ணத்துக்கு நல்ல விளைவும், தீய எண்ணத்துக்கு தீய விளைவும் ஏற்படும் எனபது உண்மை.

நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.

ஆகவே தான் நமது முன்னோர்கள் நாம் எப்போது நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.

அதற்கு ஒரே வழி அருட்தந்தை கூறிவது போல் நல்ல எண்ணங்களை விரும்பி முயன்று மனதில் இருத்த வேண்டும்.

தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம்.

பயிற்சியினால் எதுவும் முடியும்.

இந்த நற்கருத்து அனைவருக்கும் பரவ கீழே உள்ள தமிழிஷ் ஓட்டு பொத்தானை அழுத்துவதும், மேலே உள்ள தமிழ் மண பரிந்துரை இணைப்பை அழுத்துவதும் கூட ஒரு நல்ல எண்ணமே.

May 13, 2009

மனதிற்கு எஜமானாகுங்கள்!


சென்ற 'எளிய தியானம்' பதிவை படித்து விட்டு 'விழிப்புணர்வு' என்றால் என்ன என்று சிலருக்கு ஐயம் வந்துள்ளது.

திடீரென எனக்கு ஜிலேபி பற்றி ஒரு எண்ணம் வருகிறது. உடனே ஜிலேபியின் இனிப்பு உணர்வு கூடவே நினைவுக்கு வருகிறது. தொடர்ச்சியாக ஒரு நாள் ஜிலேபி வாங்கி தராமல் ஏமாற்றிய என் நண்பனை பற்றிய எண்ணமும் எழுகிறது. அடுத்தது அவன் மீது கோப உணர்வு ஏற்படுகிறது.

நம் மனம் தொடர்ச்சியாக எண்ணங்களையும், உணர்வுகளையும் உற்பத்தி செய்தவாறு இருக்கிறது.

மனதின் வேலையே அது தான். இரவும், பகலும் நாம் தூங்கும் நேரம் உட்பட மனம் இயங்கி கொண்டிருக்கிறது. அதை தான் கனவு என்கிறோம்.

இந்த எண்ணங்களுக்கு நமது மூளை மூலமாகவும், உணர்வுகளுக்கு இதயம் மூலமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த மனமும், உணர்வும் நான் என்ற மையம் அல்ல.

இந்த பதிவு எழுதும் போது உதிக்கும் எண்ணங்களும், இதை படித்து வெறுப்படையபவர்களுக்கு ஏற்படும் உணர்வும் 'நாம்' அல்ல.

நான் என்ற மையம் இவை இரண்டையும் தாண்டி நமக்குள் உள்ளது.

அது தான் உண்மையான 'நான்'

அது தான் எஜமான்.

ஆனால் நாம் 'நம்மை' மறந்து நமது மனதின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.

மனம் என்னும் வேலைக்காரன் தன்னை எஜமானனாக பாவித்து கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் எஜமான் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த வேலைக் காரன் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். ஏனென்றால் அவனது இயல்பே அது தான்.

ஆனால் ஒரு முறை எஜமான் எழுந்து ஒரு பார்வை பார்த்தால் போதும்.

வேலைக்காரன் அடங்கி விடுவான்.

அதற்கப்புறம் தன்னுடைய 'வேலைத்தனங்களை' அடக்கிக் கொண்டு எஜமானனின் கட்டளைக்கு உற்பட்டு வேண்டும் போது மட்டும் முன்பை விட திறனுடன் வேலை செய்வான்.

ஆகவே இந்த மனம் என்னும் வேலைக்காரனின் செயல் பாட்டை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
அதற்கு நாம் நம்மை உணர வேண்டும்.

அது தான் விழிப்புணர்வு.

எண்ணங்கள் தவிர்த்த வெற்று உணர்வில் மையம் கொள்வது தான் விழிப்புணர்வு.

அதனை அறியத் தான் தியானம் அவசியம்!

பிடித்திருந்தால் கீழே உள்ள தமிலிஷ் ஓட்டும், மேலே தமிழ் மண பரிந்துரையும் செய்ய தயங்க வேண்டாம்.

May 12, 2009

உலகிலேயே மிகச் சிறிய தியானம்...!

ஆம். இந்த தியானம் தான் உலகிலேயே மிகக் குறுகிய நேரத்தில் செய்யக் கூடிய தியானம்.

இதனை செய்ய ஒரு நிமிடம் கூட தேவையில்லை.

வெறும் அரை நிமிடம் போதுமானது.

என்ன அந்த தியானத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா..?

இது ஓஷோ அவர்கள் சொன்ன தியானம் தான்.

இந்த தியானத்தை எதிர்பாராமல் திடீரென செய்ய வேண்டும். அதில் தான் இந்த தியானத்தின் மொத்த நுட்பமும் அடங்கியுள்ளது.

எங்காவது நடந்து போய் கொண்டிருக்கிறோம், திடீரென நின்று விட வேண்டும்.

அரை நிமிடம் போதும்!

அப்படியே உறைந்தது போல் ஆக வேண்டும். நமது விழிப்புணர்வில் மட்டும் ஐக்கியமாகி விட வேண்டும்.

(இதனை சாலையிலோ வாகனங்கள் வரும் வழியிலோ நின்று கொண்டு செய்ய கூடாது என்பது அனைவரும் அறிந்ததே!!!)

திடீரென நாம் செய்யும் இந்த நிகழ்வு நமது உடல் இயக்கத்தை மட்டும் நிறுத்துவதில்லை. மனமும் உடனே நின்று விடுகிறது.

நமக்குள் உருவான அந்த சக்தி இந்த திடீர் நிறுத்தத்தால் நமது விழிப்புணர்வுக்கு செல்கிறது.

அப்போது தியானம் நிகழ்கிறது.

இந்த தியானத்தை கண்டு பிடித்தவர் ரஷ்ய ஞானி ஜார்ஜ் குருட்ஜீஃப்.

இந்த தியானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறை செய்ய வேண்டும். அதிக பட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆக இந்த தியானத்தை செய்ய ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.

மேலும் எளிய தியான விளக்கத்தை வரும் பதிவில் பார்ப்போம்.

அது வரை கீழே உள்ள தமிழிஷ்-ஷில் ஓட்டுப் போடவும் முந்தைய பதிவுகளை பார்க்க கீழே உள்ள இணைப்புகளை
கிளிக் செய்யவும் தவற வேண்டாம்.

May 9, 2009

வாங்க சார், தியானம் பண்ணலாம்..!

நானும், ’தியானம் செய்வது எப்படி?’ , ‘30 நாட்களில் தியானம் பழகுங்கள்’ ; ’இது தாண்டா தியானம்’ போன்ற தியான புத்தகங்களை 90A பேருந்து பிடித்து உக்கடம் சென்று பழைய புத்தக கடையில் பேரம் பேசி வாங்கி வந்து தூசி தட்டி படித்து பார்த்தேன்.

ஒன்றும் புரியவில்லை.

மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்கு குளித்து வித விதமான ஆசனங்களில் அமர்ந்து முயற்சி செய்தும் பார்த்தேன்.

எனக்கு தியானம் செய்வது எப்படி, தியானம் என்றால் எப்படி இருக்கும் என்று பிடிபடவில்லை.

பொதுவாக சரியாக புரிந்து கொள்ளாமல் புத்தகங்களை படித்து தியானம் செய்வது நலன் பயக்காது என்று சொல்வார்கள். அது உண்மையும் கூட.

இருந்தாலும் நான் தியானம் செய்து பழகிய கதையை உங்களுக்கு சொல்வதில் உவகை அடைகிறேன்.

’தியானம் என்றால் என்ன என்று ஒரு வரிக்கு மிகாமல் ஒரு சிறுகுறிப்பு வரைக:’ என்று யாராவது கேட்டால் – எண்ணங்கள் அற்ற நிலையில் அல்லது எண்ணங்கள் குறைந்த நிலையில் முழ்கி இருத்தல் தான் தியானம் என்று சொல்லலாம்.

நம் மனம் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும். இரவில் தூங்கும் போதும் கூட அது தன் செயல்பாட்டை நிறுத்துவதில்லை. அதை தான் கனவு என்கின்றோம்.

அப்படி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கும் மனதின் எண்ண ஓட்டத்தை குறைப்பது கண்டிப்பாக ஒரே நாளில் நடக்கக் கூடியது இல்லை.

மிதிவண்டி ஓட்ட பயிற்சியின் மூலமே பழக முடியும். ஆனால் ஒரு முறை அந்த சமனிலை (Balance) கிடைத்து விட்டால் அப்புறம் எப்போதும் மறக்காது.

அது போல் தான் தியானமும்.

ஆகவே அந்த நிலையை உணரும் வரை முயற்சிப்பது முக்கியம்.

சொல்லப் போனால் முயற்சிப்பது என்பதே தியானத்தை பொறுத்தவரை ஒரு தவறான வார்த்தை பிரயோகம் தான்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரயத்தனத்துடன் முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தியானத்தை விட்டு விலகிப் போகிறீர்கள்.

’அப்புறம் என்ன தான்யா செய்யணும்’ என்று கேட்டால், எதையும் எதிர்பாராமல் ஒரு ஒய்வு நிலையில் இருந்தாலே தியானம் ஏற்படும் என்று கூற வேண்டும்.

ஏனென்றால் கடும் முயற்சியுடன் இருக்கும் போது உங்கள் மனநிலை பரபரப்புடன் காணப்படும். அப்போது மன அலை வேகம் அதிக பட்சமாக இருக்கும். அது தியானத்திற்கு எதிரானதாகும். எண்ண அலையின் வேகம் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித எதிர்பார்ப்புடனும் இருக்கக் கூடாது என்று சொன்னேன்.

ஏனென்றால் எதிர்பார்ப்புடன் இருக்கும் போது மனம் ஒடிக் கொண்டே இருக்கும். ‘என்ன தியானம் இன்னும் வரலை..? தியானம் எப்படி இருக்கும்..? எனக்கு மட்டும் தியானம் ஏன் வர மாட்டேங்குது..? ஏதோ வித்தியாசாமா உணர்வு ஏற்படுதே இது தான் தியானமா? பறக்கற மாதிரி இருக்கும்னு சொன்னாங்களே ஒண்ணும் தோணலையே?’ என்று மனம் எதையாவது தொடர்ச்ச்சியாக நினைக்கும் போது, எங்கே போய் தியானம் வரும்?

இருந்தாலும் தியானம் செய்வது எளிது தான்.

எனக்கு குறுகிய காலத்தில் பயனளித்த வழியை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அதுவரை, இப்படி தியானம் செய்து பழகுவதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் முந்தைய பதிவை கீழ்க்காணும் சுட்டியை கிளிக்கி படிக்கலாம்:

May 8, 2009

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்:

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆதலினால் தியானிப்பீர்...!

May 6, 2009

பிரச்சனைகளுக்கு எளிதாக முடிவு காண்பது எப்படி?

முந்தையபதிவில் முடிவெடுக்கும் கலையை பற்றிகொஞ்சம் விவாதித்தோம்.

அதனுடையசுட்டி:

http://mukkonam.blogspot.com/2009/05/blog-post_04.html

இன்றைக்கு முடிவு எடுக்க இயலா தன்மையை போக்குவதற்கான வழி முறையை பார்ப்போம்.

முடிவெடுப்பதை தவிர்ப்பதற்கும், , ,- முடிவு எடுப்பதை ஒத்தி போடுவதற்கும் முக்கியமான காரணம் - அந்த முடிவை செயல்படுத்தும் போது ஏற்படுவதாக நம்பும் விளைவுகளை கண்டு பயந்து தான்.

ஆகவே முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒரு பழைய நோட்டிலிருந்து ஒரு முழு பக்க வெள்ளைத்தாளை கிழிக்க வேண்டும்.

அடுத்து நம் முன்னே உள்ள பிரச்சனையை எழுத வேண்டும்.

அடுத்து அதனை தீர்க்க சாத்தியக் கூறான முடிவுகளை எழுத வேண்டும்.

நமது அனுபவத்தை வைத்து அந்த முடிவுகளை சீர் தூக்கி பார்த்து சரியான ஒரு முடிவை தேர்வு செய்ய வேண்டும்.

அந்த முடிவை செயல்படுத்த தயங்குவதற்கான (பயப்படும்) காரணங்களை எழுத வேண்டும்.

அந்த பயங்களை போக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத வேண்டும்.

அதனை செயல்படுத்த வேண்டும்.

இப்போது பார்த்தீர்களென்றால் முடிவெடுப்பது மிக சுலபமாக இருக்கும்.

இந்த வழிமுறை உஙகளூக்கு பிடித்து உள்ளதா???..

பிடித்திருந்தால் கீழே தமிலிஷில் ஓட்டு போடவும்.

சந்தேகங்களையும், - உஙகளுக்கு தெரிந்த வழிமுறைகளையும் பின்னூட்டத்தில் எழுதவும்.

May 4, 2009

முடிவு எடுக்கும் கலை

நமது தினசரி வாழ்க்கையில் ஏராளமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் முடிவு எடுக்கும் கலையில் நன்கு தேறியவர்கள் ஒரு சிலரே.

பெரும்பாலோனோர் எந்த விஷயத்திலும் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகின்றனர்.

அதற்கு மிக சிறந்த உதாரணம் ஒரு சில மகளிர் புடவை கடைக்கு சென்று நாள் கணக்கில் தங்கி, புடவையை தேர்வு செய்ய முடியாமல் பிறகு வேறு கடைக்கு செல்வதை கூறலாம்.

இன்னும் சிலர் முடிவு எடுக்க பயந்து அடுத்தவரை நம்பி இருப்பர். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது தான். அதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் அடுத்தவரையே சார்ந்து பிழைப்பு நடத்துவது நமது தன்னம்பிக்கையை குறைத்து விடும். மேலும் அடுத்தவர்களின் சாவிக்கு இயங்கும் பொம்மையை போல் மாறி விடுவோம். சுற்றியுள்ளவர்கள் நம்மை ஆட்டுவிப்பவராக மாறி விடுவார்கள்.

அடுத்த வகையினர் தான் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்கள் அடுத்தவர்களிடம் ஏதும் கேட்க மாட்டார்கள் அதே சமயம் தானும் முடிவெடுக்க மாட்டார்கள். முடிவு எடுக்க பயந்து முடிவெடுப்பதை ஒத்தி வைத்தவாறு இருப்பார்கள்.

தவறான முடிவெடுப்பதும் முடிவே எடுக்காமல் இருப்பதும் ஒன்று தான். இன்னும் சில நேரங்களில் தவறான முடிவெடுப்பதை விட முடிவே எடுக்காமல் இருப்பது இன்னும் தவறாக முடியும்.

சூழ்நிலை நம்மிடம் ஏதாவது ஒரு முடிவை எதிர் நோக்கியுள்ளது. அந்த நேரத்தில் முடிவெடுக்காமல் போவது நமது முன்னேற்றத்தை தடுத்து கீழே தள்ளும்.

மன உறுதியில்லாமல், முடிவெடுக்க பயந்து ஒத்தி போடும் பழக்கம் நாளைடைவில் நமக்குள் ஊறி ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும்.

முடிவெடுப்பதை பற்றி பிரபல ஆங்கில எழுத்தாளர் பிரிஸ்டல் பின்வருமாறு கூறினார்:

நீங்கள் முடிவு எடுக்கவும், பொறுப்பு ஏற்கவும் தயங்குகிறீர்களா????? ? ?.. பெரும்பாலான மக்கள் அப்படி தான். ஆகவே தான் மிக சில தலைவர்களும், தொண்டர்கள் நிறைய பேரும் உள்ளனர். நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க நேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அந்த பிரச்சனை பெரிதாகி அதனை தீர்ப்பதற்கான உங்கள் திறன் மீது உங்களுக்கு மேலும் பயம் ஏற்படும். ஆகவே வேகமாக முடுவெடுக்க பழகுங்கள். ஏனென்றால் முடிவெடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் செயல் பட தவறுகிறீர்கள். செயல் பட தவறினால் தோல்வியை வரவேற்கிறீர்கள். ஒரு முடிவு எடுத்து விட்டீர்களென்றால் உடனே பிரச்சனைகள் காணாமல் போக ஆரம்பிப்பதை சீக்கிரமே உங்கள் அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள்...”

நாளைய பதிவில் முடிவெடுக்க முடியாத தன்மையை போக்க என்ன செய்ய வேண்டும் என்ற எளிய பயனுள்ள செய்முறையை காண்போம்.

பின்குறிப்பு:

இந்த பதிவை மற்றவர்களும் படித்து பயன் பெற கீழே உள்ள தமிலிஷ் வாக்கு பட்டையில் VOTE பொத்தானை க்ளிக்கியும், ,-பதிவின் மேலே உள்ள தமிழ் மணத்தில் பரிந்துரை செய்தும் உதவுங்கள்.

கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை பின்னூட்டத்தில் எழுதவும். நன்றி.

May 1, 2009

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருள் மொழிகள்

குகையிலிருக்கும் ஆன்மீக ரகசியங்கள் வெளியே பரவ வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார்.

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியானத்தின் முழு எல்லையை தொட்டவர். 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே காவி உடுத்தாமல், கடமைகளை துறக்காமல் உலகத்திற்கு மிக அரிதான எளிய முறை தியானத்தை பரப்பி உள்ளார்.

அருட்தந்தையின் அருள் மொழிகளில் சில:

1. எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.

2. எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். 
தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். 
அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

3. எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி. 
எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.

4. எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

5. உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே 
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.

6. இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.

7. வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.

நன்றி - வேதாத்திரி பதிப்பகம்.

Mar 4, 2009

சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?


சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் வருமா என யாராவது கேட்டால் என்னத்த கன்னையா பாணியில் "வரும்..ஆனா வராது.." என்று என் நண்பன் சொல்லுவான்.

நீங்கள் கவனித்தது உண்டா? - படிக்கும் போது உங்களுக்கு அந்த நூலில் சொல்லப் பட்ட விஷயங்கள் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தும்.

" பொறுத்திருந்தது போதும்..இனி தூள் கிளப்பி விட வேண்டியது தான்.." என்று தீர்மானிப்பீர்கள்.

ஆனால் காலம் ஓடும் போது அந்த பழைய வேகம் இருக்காது. மீண்டும் பழைய ஆளாக மாறி விடுவீர்கள்.

ஏனென்றால் நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது.

சுய முன்னேற்ற நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் நம் மனதில் ஷண நேர வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன.

வெளிச்சத்தின் ஆற்றல் குறைய குறைய மீண்டும் இருள் வந்து சூழ்ந்து விடுகிறது. நமது நம்பிக்கை தளர்கிறது.  

இதற்கு காரணம் நமது மூளையின் நியூரல் நெட்வொர்க் தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள் எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும்.

மனிதன் பழக்கத்திற்கு அடிமையாவது இதனால் தான்.

வெளி நாட்டு விஞ்ஞானி ஒருவர் ஒரு சோதனையை செய்து பார்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

அவர் தினமும் தனது நாய்க்கு உணவிடுவதற்கு முன்பு மணியை அடித்து ஓசை எழுப்புவார்.

இது தினமும் தொடர்ந்தது.

சில நாட்களுக்கு பிறகு கவனித்தார். சும்மாவேனும் மணி ஓசையை கேட்டதுமே நாயின் நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்தது!

ஏனென்றால் நாயின் மூளையின் நியூரல் நெட்வொர்க்கில் மணி ஓசை கேட்டதும் சாப்பாடு கிடைக்கும் என்பது பதிவாகி நாக்கில் நீரை சுரக்க வைத்தது.

நிலத்தில் ஒடும் தண்ணீர் எப்படி ஏற்கனவே உள்ள வழியில் ஓடி ஓடி தனது பாதையை பெரிதாக்குகிறதோ அவ்வாறே மூளையில் எண்ணங்களும் ஏற்கனவே அமைத்த பாதையில் தான் செல்லும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிக காலம் அந்த எண்ணங்களை எண்ணுகிறோமோ அந்த அளவுக்கு மூளையில் அதன் பாதை அழுத்தமாக பதிகிறது.

நீங்கள் சுய முன்னேற்ற நூல்களை படித்து உங்கள் பழைய எண்ண ஓட்டத்திற்கு குறுக்கே கட்டும் அணையினால் சிறிது காலம் வெள்ளம் வேறு திசையில் ஓடும்.

ஆனால் உங்கள் கடந்த கால எண்ணங்கள் மிக பலமானவை. சீக்கிரமே அணைக்கட்டை உடைத்து விடுகிறது.

பழைய பாதையிலே எண்ணங்கள் செல்லத் தொடங்குகின்றன. இது நமது மனதின் 'டகால்டி' வேலை தான்!

சரி இதற்கு வழியே இல்லையா? நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக செல்ல வேண்டும்.

தவறு நூல்களில் இல்லை. நம் மனதில் உள்ளது.

நமது அடி ஆழ எண்ண அமைப்பை மாற்ற வேண்டும்.

அதற்கான எளிய வழியை பிறிதொரு சமயம் பார்ப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உற்சாகத்தை தந்ததோ இல்லையோ நீங்கள் செய்யும் தமிழ்மண பரிந்துரையும் (மேலே), தமிலிஷ் (கீழே) ஓட்டும் மற்றும் உங்கள் மேலான பின்னூட்டமும் மேற்கொண்டு இது போன்ற கட்டுரைகளை தொடர எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

Feb 24, 2009

வேலையை ஒத்தி போடும் பழக்கத்தை ஒத்தி போடுவது எப்படி?


படிக்கும் போது எனக்கு நாராயணசாமி, நாராயணசாமி என்று ஒரு நண்பன் இருந்தான்.

அவனிடம் எப்போதாவது " டேய் நாராயணசாமி..இன்னிக்கு அந்த மாத்ஸ் அசைன்மெண்ட்டை முடிச்சிரலாமா?" என்று கேட்டால் உடனடியாக "டேய்..டேய்..இன்னிக்கு வேணாண்டா..வயித்து வலி...நாளைக்கு பண்ணிரலாம்.." என்பான்.

"இன்டர்னல்ஸ் க்கு இன்னிக்கு க்ரூப் ஸ்டடி பண்ணிரலாமா.." என்றால் "இன்னிக்கு வேணாம். அடுத்த வாரம் வியாழக் கிழமை பண்ணிரலாம்.." என்று பஞ்சாங்கம் பார்த்து சொல்வான்.

அதே நாராயணசாமியிடம் "இந்த சண்டே பிலிம் போலாமா?" என்றால் "இன்னிக்கே நான் ஃப்ரீ தான்..இன்னிக்கே போலாமே.." என்று நா கூசாமல் சொல்வான்.

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். நம்மில் இதே போல் எத்தனை நாராயணசாமிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

செய்ய வேண்டிய கடமைகளையும், வேலைகளையும் ஒத்தி போடுவதும் தேவையில்லாத பொழுது போக்கு விஷயங்களை  செவ்வனே செய்வதும் நம் அன்றாட வேலைகளில் ஒன்றாகி விட்டது.

இதற்கு காரணத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். - விருப்பம்.

ஆமாம். நம் மனம் விரும்பும் செயல்களை உடனே செய்யும். விரும்பாத, கடினமாக உணரும் செயல்களை ஒத்திப் போட விரும்பும்.

இதில் ஒரு மகா காமெடி என்னவென்றால் நம் மனம் ஒத்திப் போடும் வேலைகளை எப்போதுமே செய்யாது. 
நாம் நம் மனதை பற்றி ஏதாவது தப்பாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக பெரிய மனது பண்ணி அந்த வேலையை நாளைக்கு செய்யாலாம் என்று சொல்லும். 
ஆனால் நாளைக்கும் அதே மனம் தானே நம்மிடம் உள்ளது? ஆகவே மறுபடியும் ஒத்திப் போட முனையும்.

இந்த மாதிரியான நண்பர்களை ஆங்கிலத்தில் procrastinator என்று அழைக்கிறார்கள்.

இது போன்ற procrasinate மகாஜனங்கள் உலகம் முழுதும் வியாபித்து உள்ளனர். 

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்பது போல் இந்த பழக்கத்தை மாற்றுவது மிக எளிது.

தேடிப் பார்த்ததில் இரண்டு வழி முறைகள் என்னை மிகவும் கவர்ந்தன. 

நல்ல விளைவுகளை ஏற்படுத்தின. 

முறை 1:

நம் மனம் விரும்பாத விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளாது. வசதியாக மறந்து விடும். 
ஆகவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் உடனேஅருகிலுள்ள பெட்டிக் கடைக்கு சென்று ஒரு குயர் நோட் ஒன்றை வாங்கி நாம் செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணை படுத்த வேண்டும். 

அடுத்தது அந்த வேலைகளின் முக்கியத்துவத்திற்கேற்ப  அவற்றை வரிசை படுத்த வேண்டும்.

வெறுமென வேலைகளை எழுதி வரிசை படுத்தினால் மட்டும் நாம் செய்து விடுவோமா என்ன? ஆகவே அவ்வேலைகளை முடிக்க ஒரு கால நிர்ணயம் செய்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த முறையின் மூலம் சில எளிய வேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விடுவோம். 

இந்த முறையை பின்பற்றினாலும் நான் வேலைகளை செய்ய மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு இருக்கிறது அடுத்த முறை.

முறை 2: 

நாம் பிடித்த செயலை மட்டும் நேரம் காலம் பார்க்காமல் செய்வோம். 

ஆனால் பிடிக்காத சில குறிப்பிட்ட வேலைகளை கட்டி வைத்து அடித்தாலும் செய்ய மாட்டோம்.

காரணம் என்னவென்றால் அந்த வேலைகளை பற்றி நினைக்கும் போதே நம் மனம் உருவாக்கும் எதிர்மறை உணர்வு தான்!

அந்த எதிர் மறை உணர்வை நீங்கள் போக்கி கொண்டால் நீங்கள் வெறுக்கும் செயலும் உங்களுக்கு பிடித்த செயலாகி விடும்.

அப்புறம் என்ன? அந்த வேலையை விரும்பி செய்து பட்டையை கிளப்புவீர்கள்.

சரி அந்த எதிர் மறை உணர்வை போக்குவது எப்படி?

மிக மிக எளிது..!

கொசு கடிக்காத ஒரு இடத்தில் உட்கார்ந்து, நீங்கள் செய்ய விரும்பாத ஒத்திப் போடும் செயலை முதலில் மனதில் செய்து பாருங்கள்.

உண்மையாக அந்த செயலை எப்படி செய்வீர்களோ அதே போல் மனதில் நன்கு உணர்ந்து செய்யுங்கள். 

அப்படி செய்யும் போது உங்கள் எதிர் மறை உணர்வு சமப்படுத்த பட்டு விடும். 

(குறிப்பு: இந்த முறையை வேறு வேலையை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது வாகனத்தை ஓட்டும் போதோ செய்து பார்க்க வேண்டாம்.)

அப்புறம் என்ன முதலில் நீங்கள் ஒத்திப் போட்ட செயலை இனி மேல் முதல ஆளாக முடித்து விட்டு ஏதாவது காமெடி சானலை பார்த்து கொண்டிருப்பீர்கள்.

ஒத்திப் போடும் பழக்கத்தை ஒரேடியாக ஒத்தி போடுங்கள்.

பிடித்திருந்தால் ஒத்திப் போடாமல் உடனே பின்னூட்டம் எழுதுங்கள்.

Feb 8, 2009

ஐ.பி.எல் : ஏலங்களும் சில ஓலங்களும்.


கோவாவில் உள்ள பனாஜியில் ஐ.பி.எல் இரண்டாவது தொடருக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது.

பேசாமல் கிரிக்கெட் விளையாடி பழகியிருக்கலாம் என எல்லோரும் ஆசை படும் அளவுக்கு போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

2008ல் நடை பெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் விடப் பட்ட தானை 
தலைவர் தோனி (ரூ 6 கோடி) மற்றும் சைமண்ட்ஸ் (ரூ 5.4 கோடி) யே மிஞ்சி இந்த முறை பீட்டர்சன் மற்றும் பிளிண்டாஃப் ஆகிய இருவருக்கும் யோகம் அடித்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஒரு வேளை இப்போது சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கலாம்.

சும்மா சொல்லக் கூடாது. இருவருக்கும் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது.

அவர்களது ஏலத் தொகையைக் கேட்டால் வடிவேலு வராமலே கண்ணை கட்டுகிறது.

இருவரும் தனித் தனியாக ரூ 7.35 கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
பீட்டர்சன் பெங்களுர் ராயல் சேலன்ஜர்ஸுக்கும், பிளிண்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கிந்திய தீவுகளிடம் டெஸ்ட் தொடர் விளையாட வேண்டி உள்ளதால் ஐ.பி.எல் லின் ஆறு வார அட்டவணையில் மூன்று வாரங்கள் மட்டுமே விளையாட போகிறார்கள்.       
( கவலைப் பட வேண்டாம். அதற்கேற்றாற் போல் சம்பளம் கொஞ்சம் குறைத்து விடுவார்கள்). 

இது போக அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தங்களது ஏலத் தொகையில் பத்து சதவிகிதம் தங்கள் நாட்டுக்கு இந்த ஐ.பி.எல் சுற்றுக்கு விளையாட அனுமதித்ததற்காக கொடுக்க வேண்டுமாம்.

பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா பீட்டர்ஸன்னை எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று வந்ததாகவும், 
அவரை வாங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறி உள்ளார்.  
வங்க தேச வீரர் மொர்டாசா ரூ.3 கோடிகளுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்காக எடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஏலத்தில் யாரும் வாங்காமல் புறக்கணிக்கப் பட்ட வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளாக், மெக்கெய்ன், இலங்கையின் குலசேகரா ஆகியோர் அடங்குவர்.

ஐ.பி.எல் லின் வாண வேடிக்கை விரைவில் ஆரம்பிக்க போகிறது. இப்போதே போட்டியை காண துண்டு போட்டு இடம் பிடிக்க எல்லாரும் காத்திருக்கின்றனர்.

என் நண்பன் இதைக் கேட்டதிலிருந்து, "எனக்கு வெறும் ஆயிரம் ரூபாயும், மூணு வேளை சாப்பாடும் போட்டால் போதும்... கிரிக்கெட் என்ன, கூடவே கரகாட்டம், ஒயிலாட்டம், கதகளி எல்லாம் ஆடிக் காமிப்பேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.

என்ன செய்ய..?

Feb 5, 2009

உலக சாதனை படைத்த முரளிதரனும், கம்பீரும்.



இன்று நான்காவது ஒரு நாள் போட்டியில் டாஸிலும் ஜெயித்துக் கொண்டிருக்கும் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்று சச்சினையும், ஜாகீரையும் சாப்பிட்டு விட்டு ஒய்வு எடுக்க சொல்லி அதற்கு பதிலாக ரோஹித் மற்றும் யூசுப்பின் சகோதரரையும் சேர்த்திருந்தனர்.

ஆரம்பமே அடியாக இருந்தது இந்தியாவுக்கு.

மூன்று ஓவர்களில் 14 ரன் களுக்கு முதல் விக்கெட் விழுந்தது. சேவக் 5 ரன் களில் வெளியேறினார்.

வலது இடது ஆட்டக் கார கலப்புக்காக தோனி இன்று மூன்றாவதாக இறங்கினார்.

கம்பீரும், தோனியும் சேர்ந்து விக்கெட்டுக்கு இடையே கபடி விளையாடி ரன்களை குவித்தனர்.

தோனி அடித்த 94ல் போட்டியின் தொனியே மாறிப் போனது.

கம்பீரின் கம்பீரமான ஆட்டத்தால் 147 பந்துகளில் 150 ரன்களை குவித்தார். அதில் 14 நான்குகளும் ஒரு 6ம் அடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கையில் ஒரு நாள் போட்டிகளில் இது வரை அரவிந்த் டிசில்வா மற்றும் ஆண்டி ஃபிளவர் எடுத்த 145 தான் அதிக பட்சமான ஸ்கோராக இருந்தது.

இன்று கம்பீர் அதனை கடந்து உலக சாதனை புரிந்தார்.

கம்பீர் 150 ரன்களில் இருந்த போது முரளிதரன் வீசிய பந்தை மெதுவாக பாசத்துடன் தடவி சங்கககாரா கையில் கொடுக்க நடுவர் தர்ம சேனா ஒரு விரலை உயர்த்த மைதானத்தில் சத்தம் காதை பிளந்தது.

வாசிம் அக்ரமின் சாதனையை கடந்து முரளிதரன் 503 விக்கெட் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

அப்போது ஆடிக் கொண்டிருந்த தனது சக அணி வீரரான சுரேஷ் ரெய்னா அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இறுதியில் இந்தியா 323 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

என்னதான் ஆனாலும் இந்த போட்டியிலும் இந்தியா ஜெயித்து விடும் என்று எங்கள் ஊர் டீ கடைகளிலும் சலூன்களிலும் பேசி கொண்டிருக்கின்றனர்.

Feb 4, 2009

ஒரு நாள் தொடர் - வந்தது இந்தியா வசம்!


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா நேற்று கைப்பற்றியுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக 8 ஒரு நாள் போட்டிகளில் வென்றுள்ளது உபரித் தகவல்.

சத்தியமாக இது வரை இவ்வளவு பலம் பொருந்திய இந்திய அணியை வாழ் நாளில் பார்த்தது கிடையாது.

ஒவ்வொரு வீரரும் சும்மா போட்டு தாக்குகிறார்கள்.

முன்பு அணிக்கு யாரை சேர்ப்பது என்று தவிப்பார்கள். இப்போதும் யாரை சேர்ப்பது என்ற பிரச்சனை உண்டு.

ஆனால் ஒரு வித்தியாசம் - முன்னெல்லாம் சரியான ஆள் கிடைக்காமல் தேடுவார்கள்.

இப்போது ஏகப் பட்ட அண்ணன்மார்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அதனால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மாபெரும் குழப்பம் நிலவுகிறது.

எல்லாம் ஐ.பி.எல் லால் வந்த வினை என்று தோன்றுகிறது.

 தர்ம அடி மன்னன் சேவக், 
கச்சித ஆட்ட கம்பீர், 
ரவுண்டு கட்டி அடிக்கும் யுவராஜ், 
கவலைப் படாமல் கலக்கும் ரெய்னா, 
"எங்கிருந்துய்யா புடிச்சீங்க, இந்த ஆளை?" என எதிரணியினரரை வருந்ததுடன் கேட்க வைக்கும் யூசுப் பதான்,  
இவ்வளவு போதாது என பந்து வீச்சில் எதிரணி விக்கெட்டுக்களை வீடு கட்டி அடிக்கும் இஷாந்த்
என ஆளாளுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பட்டையைக் கிளப்புவதால் மொத்த அணியுமே அமர்க்களமாய் தயாராகி உள்ளது.

 தானைத் தலைவர் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

இந்த நேரந்தில் 1983 ல் கபிலின் தலைமையின் கீழ் முதன் முதலாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஜாம்பவான்களை நினைவு கூர்வோம்.

Feb 3, 2009

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்: அதிரடி சேவக்கும் சூப்பர் யுவராஜும்.

இன்றைய இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிரடி மன்னன் சேவக் வழக்கம் போல் தனது தர்ம அடியின் மூலம் வெறும் 75 பந்துகளில் செஞ்சுரி அடித்தார்.

இன்றைய இந்திய ஆட்டத்தில் வீரேந்திரர் பின்னிய 116ம் (90 பந்துகள்) அண்ணன் யுவராஜ் எடுத்த 117ம் (95 பந்துகள்) அசாதாரணமானவை.

24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து அணியை கரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் கம்பீர் ஆட்டமிழந்ததும் கூட குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சச்சின் (7) L.B.W வில் ஆட்டமிழந்தார்.

பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது போல் இருந்தது.

டெண்டுல்கரின் அவுட்டின் போது பெவிலியனில் யுவராஜ்சிங் வருத்தப் பட்டதை காண முடிந்தது.

பிறகு யுவராஜ் சிங் நூறு அடித்த போது பெவிலியனில் இருந்த டெண்டுல்கரை நோக்கி ஆர்ப்பரித்து சைகை செய்ததும் பதிலுக்கு டெண்டுல்கர் உற்சாகத்தில் கை அசைத்து எதையோ சொல்லியதையும் கண்டிப்பாக கூறியாக வேண்டும்.

கம்பீரின் அவுட் (10) சிறிதும் எதிர் பாராதது.

ஃபெர்னாண்டோவின் பந்தை சேவக் நேராக அடிக்க அது பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் மோத கம்பீர் அவுட்.

ஏழாவது விக்கெட்டுக்கு வந்த யூசுப் பதான் அந்த அடி அடிப்பார் என ஐ.பி.எல். பார்க்காத யாரும் நம்ப மாட்டார்கள்.

வழக்கம் போல் தலைவர் 38 பந்துகளில் 59 ரன் கள் அடித்து தர்ம அடி மன்னனாக விளங்கினார்.

இறுதியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றியதும், ஆட்ட நாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கும் வழங்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. 
 

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...